அசுத்தம் மற்றும் தண்ணீர் இரு வகைப்படும்
அசுத்தம் (நஜீஸ்) இரண்டு வகைப்படும்
1) மன்னிக்கப்பட்ட அசுத்தம்.
அதாவது: புறா, குருவி போன்றவற்றின் எச்சம்.பேன். மூட்டைப்பூச்சி, தெள்ளு, ஈ போன்றவற்றின் இரத்தம் ஆகியவை இலேசான அசுத்தமாக (நஜீசாக) கருதப்படும். இவற்றில் சிறிதளவேனும் புடவை அல்லது உடல், தொழும் இடம் ஆகியவற்றில் பட்டு விட்டால் மார்க்கத்தில் இவை மன்னிக்கப்படும்.
2) மன்னிக்கப்படாத அசுத்தம்.
மன்னிக்கப்படாத அசுத்தம் இரண்டு வகைப்படும்
முதல் வகை :- அதிக இரத்தம், ஊனம், வாந்தி, உண்பதற்கு விலக்கப்பட்ட மிருகங்களின் பால், மதுபானம், முன்பின் துவாரங்களால் வெளியேறுபவைகள் (விந்தைத் தவிர) மேலும் இறந்த பிராணிகள். இவற்றின் பதனிடப்படாத தோல், மயிர், எலும்பு முதலியவை மன்னிக்கப்படாத அசுத்தமாகும். இதனைத் தண்ணீரினால் கழுவுவதன் மூலம் இவற்றைச் சுத்தம் செய்தல் வேண்டும்.
இரண்டாம் வகை :- நாய், பன்றி ஆகியவற்றின் எச்சில், மயிர், தோல் வியர்வை ஆகியவை எல்லாம் கடினமான நஜீஸாகும். இவை ஈரமாக இருக்கும் போது உடம்பில் பட்டாலும், இவற்றின் மீது விழும் தண்ணீர் எமக்குத் தெறித்தாலும், அசுத்தம் ஏற்பட்டு விடும். எனவே அசுத்தமடைந்த இடத்தை ஏழுமுறை கழுவ வேண்டும். ஆனால் நாய் நக்கிய பாத்திரங்களை ஆறு முறை நன்றாகத் தண்ணீரால் கழுவி ஏழாம் முறை சுத்தமான மண்ணைச் சேர்த்துக் கழுவினால் தான் சுத்தமடையும்.
தண்ணீர் இரண்டு வகைப்படும்
1) கூடுதலான தண்ணீர்” குல்லத்தைன் அளவும். அதற்குக் கூடுதலாகவும் உள்ள தண்ணீராகும்.
உதாரணத்திற்கு :- கடல், ஏரி, ஆறு, பத்துக்கு பத்து நீளம் அகலமுள்ள தண்ணீர் தெப்பம் (ஹவ்ளு) ஆகியவைகளாகும்.
🔸இவற்றில் எந்த அசுத்தம் விழுந்தாலும் அது தண்ணீரை அசுத்தமாக்கி விடாது. குளிப்பு கடமையானவர்கள் இதில் முங்கியும் குளிக்கலாம். இவற்றில் இரத்தம், மலம், சிறுநீர் போன்றவை விழுந்து இவற்றின் வாசனையோ, ருசியோ, நிறமோ, காணப்படாவிட்டால் அத்தண்ணீரை துப்பரவாகவே கருதப்படும். அவற்றில் ஏதாகிலும் காணப்பட்டால் அத்தண்ணீர் அசுத்தமாகிவிடும். கண்ணுக்குப் புலப்படும் மலம் போன்ற அசுத்தங்கள் ஓர் ஓரத்தில் கிடந்தால் அதற்கு சற்று தொலைவான இடத்தில் அமர்ந்து ஒளுச் செய்வது கூடும்.
🔸கிணற்றுத் தண்ணீரில், எலி, சிட்டுக்குருவி, பல்லி இது போலுள்ளவைகள் செத்துவிட்டால் நடுத்தரமான வாளியால் இருபது முதல் முப்பது வாளி வரை தண்ணீர் இறைக்க வேண்டும். மேலும் புறா,கோழி,பூனை. போன்றவைகள் விழுந்து செத்து விட்டால் நாற்பது முதல் ஐம்பது வாளி தண்ணீர் இறைக்க வேண்டும். சிறிய பொருள்கள் விழுந்து செத்து உப்பி, ஊதி உடைந்து போனால் தண்ணீர் முழுவதையும் இறைக்க வேண்டும்.
🔸நாய், ஆடு, மனிதர் போன்றவைகள் விழுந்து செத்துவிட்டால், பெரும் தொட்டி, கிணறு, ஊற்றுநீர் ஆகியவைகளின் தண்ணீர் முழுவதையும் இறைக்க வேண்டும். இறைக்க முடியாத அளவிற்கு பெருத்த நீராக இருந்தால், ஆடு, நாய் மனிதன் போன்றவைகளுக்கு இரு நூறு வாளி முதல் முன்னூறு வாளியும் இறைக்க வேண்டும்.
🔸ஒரு பொருள் விழுந்து செத்ததும் அந்தத் தண்ணீர் நஜீஸாகி விடுகின்றது. எனவே முன் குறிப்பிட்டதுபோல அந்தத் தண்ணீரை இறைக்காமல் புழங்குவது கூடாது. இருப்பினும் மடுவுகள் மூலம் வெளியாகிக் கொண்டிருக்கும் ஏரி, குளம் ஆகியவைகளின் தண்ணீரையும், கடல், ஆறு, வாய்க்கால் இவைகளைப் போன்ற தண்ணீரையும் இறைக்க வேண்டியதில்லை.
2. குறைவான தண்ணீர்” இது குல்லத்தைன் அளவுக்குக் குறைவான அளவு தண்ணீராகும்.
♦️குறிப்பு :- குல்லத்தைன் என்றால் ஏறக்குறைய இரண்டு அடி நீள, அகல ஆழமுள்ள தொட்டியில் கொள்ளும் நீரின் அளவாகும்.
🔸மேலும் குல்லத்தைன் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு தண்ணீரில் நஜீஸ் விழுந்து விட்டால் நிறம், சுவை, மணம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தன்மையை அறிய முடியாத நிலையிருந்தால் அந்தத் தண்ணீர் அசுத்தமடையாது. ஆனால், நிறம், மணம், சுவை ஆகியவற்றில் ஏதாவது ஒரு தன்மை காணப்பட்டால் அத்தண்ணீர் அசுத்தமாகிவிடும்.
🔸நீரில் வாழும் மீன் தவளை, நண்டு, போன்றவைகள் செத்து விட்டால் தண்ணீரை (நஜீஸ்) அசுத்தமாக கருதப்படமாட்டாது. இருப்பினும் நிறம், சுவை, மணம் வெளிப்பட்டால் தண்ணீர் அசுத்தம் அடையும்.
🔸மேலும் தாய்ப்பால் மட்டும் அருந்தும் ஆண் குழந்தையின் சிறுநீர் பட்டுவிட்டால் கழுவத் தேவையில்லை. அதன்மேல் நீரை ஓடவிட்டால் போதும். ஆனால் பெண் குழந்தையின் சிறுநீர் பட்டுவிட்டால் அந்த இடத்தை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். முழுக்கு விதியான ஒருவர் குல்லத்தைன் நீரில் விழுந்து முழுகிக் குளித்தாலும் அத்தண்ணீர் அசுத்தமடையாது.
طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவருடைய பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் அதை சுத்தம் செய்யும் முறையானது, ஏழு முறை அதை அவர் கழுவுவதாகும். முதல் முறை மண்ணால் அதைக் கழுவ வேண்டும்.
நூல் ஆதாரம் 📚 :- முஸ்லிம் 279, அபூ தாவூத் 71 அஹ்மது 9511
إِنَّمَا يُغْسَلُ مِنْ بَوْلِ الْأُنْثَى وَيُنْضَحُ مِنْ بَوْلِ الذَّكَرِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். பெண் குழந்தையின் சிறுநீருக்க இருந்தால் தான் (தண்ணீரைக் கொண்டு) கழுவப்பட வேண்டும். ஆண் குழந்தையின் சிறுநீருக்காக இருந்தால் தண்ணீர் தெளிக்கப்பட வேண்டும்.
நூல் ஆதாரம் 📚 :- அபூதாவூத் 375 இப்னு மாஜா 522 அஹ்மது 26875
♦️குறிப்பு :- இஸ்ஸ்லாம் அசுத்தங்களை முற்றாக வெறுக்கிறது, கடமையான தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்றால்! அதற்கு அசுத்தத்தை முற்றாக நீக்குவது மிக முக்கியமாகும். எனவே ஒவ்வொரு முஸ்லிம்களும் அசுத்தங்களை தண்ணீரை கொண்டு நீக்கும் மேற்கூறிய முறைகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்