46) அவ்லியாக்களை எவ்வாறு அடையாளம் காண்பது?
46) அவ்லியாக்களை எவ்வாறு அடையாளம் காண்பது?
📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ
குர்ஆன் கூறுகிறது நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள் மேலும், (அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற) உண்மையாளர்களுடன் சேர்ந்து இருங்கள்.
சூரா தவ்பா ஆயத் 119
இந்த வசனத்தை கூர்ந்து கவனியுங்கள். (يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا) யா அய்யுஹல்லதீன ஆமனு என்ற வார்த்ததை நம்பிக்கையாளர்கள் முஸ்லீம்களை குறித்து பேசுகிறது. (اتَّقُوا اللّٰهَ) த்தக்குல்லாஹ் என்ற வார்த்தை அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கும் முஃமின்களை குறித்து பேசுகிறது. (وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ) வகூனு மஅஸ் ஸாதிகீன் என்ற வார்த்தை அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற உண்மையார்கள் அவ்லியாக்களுடன் சேர்ந்திருப்பதை குறித்து பேசுகிறது.
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற ஏகத்துவ கலிமாவை உறுதியாக ஏற்றுள்ள முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பயந்து நடக்கவேண்டும். அவனின் கட்டளைகளை முற்றாக எடுத்து நடக்கும் முஃமின்களாக மாறவேண்டும் அது மட்டுமின்றி அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்து நடந்தது மட்டுமின்றி ஸுன்னத்தான அமல்களை கொண்டு அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற அவ்லியாக்களை அடையாளம் கண்டு அவர்களுடன் சேர்ந்திருக்க வேண்டும் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.
திருக்குர்ஆன் ஹதீஸ்களை மூலாதாரமாக வைத்து இன்றைய காலகட்டத்தில் நல்லவர்கள் கெட்டவர்கள் இறைமறுப்பாளர்கள் நயவஞ்சகர்களை சில பல அடையாளங்களை கொண்டு நாம் அவர்களை பிரித்து அறிந்து கொள்கிறோம் அதுபோல் அவ்லியாக்களுடன் சேர்ந்திருக்கும் படி மேற்கூறிய இறைவசனம் நமக்கு கட்டளையிடுகிறது. அப்படி என்றால் அவ்லியாக்களின் அடையாளம் என்ன?
اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
குர்ஆன் கூறுகிறது (முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் அவ்லியாக்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள்.
சூரா யூனுஸ் ஆயத் 62
عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أُخْبِرُكُمْ بِخِيَارِكُمْ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ الَّذِينَ إِذَا رُؤُوا ذُكِرَ اللَّهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களில் உன்னதமானவர்கள் யார் என சொல்லட்டுமா எனக் கேட்டார்கள். அதற்கு ஸஹாபாக்கள் சொல்லுங்கள் யா ரஸூலல்லாஹ் என்றனர். அச்சமயம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உங்களில் உன்னதமானவர் யாரெனில் எவர்களை பார்த்தால் மட்டுமே அல்லாஹ்வின் ஞாபகம் வருமோ அவர் தான் என்றார்கள்.
அறிவிப்பவர் :- அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 4109 அஹ்மது 27601
عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنَ النَّاسِ مَفَاتِيحَ ذِكْرِ اللَّهِ إِذَا رُؤُوا ذُكِرَ اللَّهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் நினைவை திறந்து விடும் திறவுகோளாக மனிதர்களில் சிலர் உள்ளனர். அவர்களை நீங்கள் பார்த்தால் அல்லாஹ்வின் நினைவு உங்களுக்கு வரும்.
அறிவிப்பவர் :- இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தப்ரானி 10325
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَوْلِيَاءُ اللَّهِ قَالَ الَّذِينَ إِذَا رُؤُوا ذُكِرَ اللَّهُ
ஒரு மனிதர் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் யா ரஸூலல்லாஹ்! அவ்லியாக்கள் என்பவர்கள் யார்? என்று கேட்க அதற்கவர்கள் “யாரை நீங்கள் பார்க்கும் போது அல்லாஹ்வின் ஞாபகம் வருகின்றதோ அவர்கள்தான் அல்லாஹ்வின் அவ்லியாக்கள் என்றார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் மஜ்மவுஸ் ஸவாயித் 218
அவ்லியாக்களுக்கு யாதொரு பயமுமில்லை அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள். மேலும் அவர்களை பார்த்தால் அல்லாஹ்வை பற்றிய ஞாபகம் சிந்தனை வரும் என்ற கருத்துக்களை மேற்கூறிய திருக்குர்ஆன் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
குறிப்பு :- ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ் பகுத்தறிவை கொடுத்துள்ளான். நல்லவர்கள் கெட்டவர்கள் இறைமறுப்பாளர்கள் நயவஞ்சகர்களை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்ளும் வழியையும் திருக்குர்ஆன் ஹதீஸில் தெளிவு படுத்தி காண்பித்துள்ளானோ அதேபோல அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற அவ்லியாக்களையும் அவர்களின் அடையாளங்களை கண்டறிந்து கொள்ளும் வழியையும் திருக்குர்ஆன் ஹதீஸில் தெளிவு படுத்திக் கூறியுள்ள காரணத்தால் அஹ்லுஸ் ஸுன்னா முஸ்லிம்கள் முஃமின்கள் மேற்கூறிய அடையாளங்களை கொண்டு அவ்லியாக்களை கண்டறிந்து கொள்ள முடியும் என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்