5) மறுமை நாளில் அல்லாஹ்வின் கைகளில் வானம் பூமி சுருட்டப்படுமா?
மறுமை நாளில் அல்லாஹ்வின் கைகளில் வானம் பூமி சுருட்டப்படுமா?
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
وَمَا قَدَرُوْا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ وَالْاَرْضُ جَمِيْعًا قَبْضَتُهٗ يَوْمَ الْقِيٰمَةِ وَالسَّمٰوٰتُ مَطْوِيّٰتٌ بِيَمِيْنِهٖ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ
குர்ஆன் கூறுகிறது அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை; இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன்.
சூரா ஜுமர் ஆயத் 67
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ : إِنَّ اللَّهَ يَقْبِضُ يَوْمَ القِيَامَةِ الأَرْضَ وَتَكُونُ السَّمَوَاتُ بِيَمِينِهِ ثُمَّ يَقُولُ : أَنَا المَلِكُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்“ அல்லாஹ் மறுமைநாளில் பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் இருக்கும். பிறகு “நானே அரசன்!“ என்று சொல்வான் என்றார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 7017
மேற்கூறிய குர்ஆன் ஹதீஸ் பிரகாரம் மறுமையில் அல்லாஹ் வானம் பூமியை தன் கைக்குள் அடக்குவான் என்றும் அதனை கைக்குள் சுருட்டுவான் என்றும் குறிப்பிட்டு கூறப்படுகிறது. இவைகளை தவறாக புரிந்து கொண்ட யூதர்கள் பற்றி கீழ்கானும் ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّ يَهُودِيًّا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : يَا مُحَمَّدُ إِنَّ اللَّهَ يُمْسِكُ السَّمَوَاتِ عَلَى إِصْبَعٍ وَالأَرَضِينَ عَلَى إِصْبَعٍ وَالجِبَالَ عَلَى إِصْبَعٍ وَالشَّجَرَ عَلَى إِصْبَعٍ وَالخَلاَئِقَ عَلَى إِصْبَعٍ ثُمَّ يَقُولُ : أَنَا المَلِكُ. فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ ، ثُمَّ قَرَأَ : {وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ}
ஒரு யூதர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அவைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து “முஹம்மதே! அல்லாஹ் (மறுமை நாளில்) வானங்களை ஒருவிரலின் மீதும் பூமிகளை ஒருவிரலின் மீதும் மலைகளை ஒரு விரலின் மீதும் மரத்தை ஒரு விரலின் மீதும் (இதர) படைப்புகளை ஒரு விரலின் மீதும் நிறுத்திக்கொண்டு, “நானே அரசன்“ என்று கூறுவான்“ என்றார். (இதைக் கேட்ட) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் வெளியே தெரியச் சிரித்துவிட்டு, “அவர்கள் அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கவில்லை“ எனும் (யூதர்களைப் பற்றிய 6:91 வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 7018, 7019
யூதன் கூறிய வார்த்தைகள் :- அல்லாஹ் (மறுமை நாளில்) வானங்களை ஒருவிரலின் மீதும் பூமிகளை ஒருவிரலின் மீதும் மலைகளை ஒரு விரலின் மீதும் மரத்தை ஒரு விரலின் மீதும் (இதர) படைப்புகளை ஒரு விரலின் மீதும் நிறுத்திக்கொண்டு, “நானே அரசன்“ என்று கூறுவான்“ என்றவுடன் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் வெளியே தெரியச் சிரித்தார்கள். கோபம் கொள்ளவில்லை. காரணம் இவ்வாறு கூறியவன் இணைவைப்பாளன் யூதனாகும். யூதர்களின் பார்வையில் அல்லாஹ்விற்கு உருவம் உண்டு அதாவது முகம் கைகள் கால்களெல்லாம் உண்டு. ஆக அந்த யூதன் அல்லாஹ்வின் கைவிரல் என்று உருவம் கற்பிப்பதை பார்த்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்கு சிரித்து விட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கவில்லை“ எனும் (யூதர்களைப் பற்றிய 6:91 வது) வசனத்தை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.
இதிலிருந்து நாம் அதிக படிப்பினைகளை பெற வேண்டும் மேற்கூறப்பட்ட பல தலைப்புகளில் அல்லாஹ்வின் முகம் கை கால் பற்றி இடம்பெற்றுள்ள குர்ஆன் ஆயத்துக்களுக்கும் ஹதீஸ்களுக்கும் உருவ வணங்கிகள் போன்று நேரடி அர்த்தம் கொடுக்காமல் மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தங்கள் கொடுக்கப்பட்டது. அதே போன்று தான் அல்லாஹ் வானம் பூமியை தன் கைக்குள் அடக்குவான் சுருட்டுவான் என்பதன் அர்த்தம் அல்லாஹ் அவனுடைய ஆற்றல் சக்தியை கொண்டு வானம் பூமியை தன் இஷ்டப் பிரகாரம் மாற்றி அமைப்பான் அல்லது தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பான். என்று மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் கொடுக்க வேண்டும். இதற்கு மாற்றமாக யூதர்களை போன்று அல்லாஹ் தன் கை விரல்களால் அடக்குவான் சுருட்டுவான் என்று நேரடி அர்த்தம் கொடுத்து அல்லாஹ்விற்கு உருவம் கற்பிக்க முற்படுவது முற்றிலும் தவறு என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
♦️எனவே மேற்கூறிய ஆயத்திற்கு சரியான அர்த்தம் :- அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை; இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் சுருட்டப்பட்டதாக இருக்கும்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன் என்று மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். மேலும் மேற்கூறப்பட்ட ஹதீஸிற்கு சரியான அர்த்தம் :- அல்லாஹ் மறுமைநாளில் பூமியைத் தன் இஷ்டப் பிரகாரம் அடக்கிக் கொள்வான். வானங்கள் அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். பிறகு “நானே அரசன்!“ என்று சொல்வான் என்று மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் கொடுக்க வேண்டும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்